தமிழகத்தில் பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கிய ஆங்கிலேயர் ஆட்சி 1947இல் இந்தியா விடுதலை பெறும் வரை நீடித்தது. தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினேழாம் நூற்றாண்டில் கால் பதித்தனர். 1684-ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பெனி பிரதேசங்கள்,சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களின் விளைவாக ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப்பு மற்றும் பிரெஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன.

சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் தெற்கிலும், பல தமிழகப் பகுதிகள் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தன. ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி 1792-ஆம் ஆண்டு வருவாய்த் துறையின் செயல்பாடுகளை மறுசீரமைப்பு செய்தது. 1799-ஆம் ஆண்டு தஞ்சாவூரும், 1801-ஆம் ஆண்டு கர்நாடகப் பகுதியும் கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.

நிலவரித் திட்டம்

நிலையான நிலவரித்திட்டம் ஆங்கில ஆளுநர் எட்வர்டு கிளைவ் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவசூலிக்கும் முறையை கொண்டு வரும் நோக்கத்தோடு, காரன்வாலிசு பிரபுவின் நிலையான நிலவரித்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

இந்த முறையில் வரி வசூலை நிர்ணயிக்கும் பொருட்டு அனைத்து நிலப்பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. அவ்வாறு இணைக்கப்பட்ட நிலங்கள் மிட்டா என அழைக்கப்பட்டன. அந்த மிட்டாக்கள் மிட்டாதாரர்களிடம் குத்தகைக்கு விடப்பட்டது.

1802-ஆம் ஆண்டு பாராமஹாலில் இந்த நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது. பாளையங்கள் ஐமீன்களாக மாற்றப்பட்டன. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வரிவசூலிப்பதில் குத்தகை முறையைப் பின்பற்றியது. செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த நிலவரித்திட்டம் தோல்வியுற்றது.

கிராம நிலத்தீர்வைத் திட்டம்

கிழக்கிந்தியக் கம்பெனியின் எதிர்ப்பார்ப்புகளை நிலையான நிலவரித்திட்டம் பூர்த்தி செய்யவில்லை. எனவே 1804-ஆம் ஆண்டு முதல் 1814-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கிராம நிலத்தீர்வை முறையை கிழக்கிந்தியக் கம்பெனி அமல்படுத்தியது. இந்த முறை திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தென் ஆற்காடு மற்றும் வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

ரயத்துவாரித் திட்டம்

காரன்வாலிசு பிரபு வரி வசூல் முறையை சீர்த்திருத்தம் செய்யும் பொருட்டு அலெக்சாண்டர் ரீட் மற்றும் தாமஸ் மன்றோ ஆகிய இருவரையும் நியமனம் செய்தார். பலவிதமான நிலவரிக் கொள்கைகளை நன்கு ஆராய்ந்த தாமஸ் மன்றோ (1820-27) சென்னை மாகாணத்தில் ரயத்துவாரி முறையை அறிமுகப் படுத்தினார்.

பின்னர் சேலம், தஞ்சாவூர், மலபார் மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உழவர்கள் அரசாங்கத்திற்கு நேரடியாக வரி செலுத்த வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். 1857-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பெரும் பகுதி ரயத்துவாரி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மகல்வாரி முறை

1833-ஆம் ஆண்டு மகல்வாரி முறை வில்லியம் பெண்டிங் பிரபுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முறையில் உழவர்களும், நில உரிமையாளர்களும் அரசாங்கத்திடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ரயத்துவாரி முறையிலும், மகல்வாரி முறையிலும், உழவர்களின் நிலையில் எவ்விதமான மாற்றமும் காணப்படவில்லை.

1806-இல் வேலூர் புரட்சி முறியடிக்கப்பட்ட பின் தமிழகத்தில் ஆங்கில ஆட்சிக்கு தீவிர எதிர்ப்பு எதுவும் எழவில்லை. 1857-இல் சிப்பாய் கலகத்தின் போதும் தமிழகம் அமைதியாகவே இருந்தது.

மன்னர் ஆட்சி (1858-1920)

சிப்பாய் கலகத்தின் விளைவாக கம்பெனியின் கீழிருந்த இந்திய ஆட்சி, பிரிட்டிஷ் முடியாட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. 1877-78 ஆம் ஆண்டு கடும்பஞ்சம் சென்னை மாகாணத்தை தாக்கியது. இது தாது ஈஸ்வர ஆண்டு கருப்பு எனப்பட்டது. பருவமழை தவறியதாலும் அரசின் மெத்தனத்தாலும் 50 இலட்சம் மக்கள் மாண்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் இலங்கை, பர்மா, பிஜி தீவுகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக இடம் பெயர்ந்தனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தொடங்கின. அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டது.

இரட்டை ஆட்சி முறை (1920 -37)

1919-ஆம் ஆண்டு மான்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்த்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மாகாணங்களில், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாகாணத்தில் சட்டசபை விரிவுபடுத்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடித் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரட்டை ஆட்சி முறையை தேசியவாத இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பாலும் புறக்கணித்து. பிராமணர் தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. ஆங்கில அரசுக்கு அல்லாதவர்களுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியே ஆதரவாகவும் செயல்பட்டது. 1920 முதல் 37 வரை நான்கு முறை நீதிக்கட்சியும், ஒரு முறை சுயேட்சைகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்தனர்.

1920-இல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமும், 1927-இல் நடைபெற்ற சைமன் கமிஷன் போராட்டமும் தமிழகத்தில் பெரிய ஆதரவு பெற்றிருக்கவில்லை. ஆனால் 1930-இல் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கமும், உப்பு சத்தியாகிரகமும் தமிழகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தன.

மாநில சுயாட்சி (1937-47)

இந்திய அரசாங்கச் சட்டம் 1935-இன் படி, 1937-இல் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. 1937-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ராஜகோபாலச்சாரி முதல்வரானார். 1939- அக்டோபரில், இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதை கண்டித்து, காங்கிரஸ் அரசு பதவி விலகியது. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1942-இல் நடத்தப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. 1946-இல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்தபின்னர் தேர்தல் மீண்டும் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் வெற்றி பெற்று தங்குதுரி பிரகாசம் சென்னை மாநிலத்தின் முதல்வரானார். 

ஆனால் ஒரு வருடத்திற்குள் உட்கட்சி பூசலினால், அவர் பதவி விலக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 15 ஆகஸ்ட் 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது அவரே தமிழகத்தின் முதல்வராக இருந்தார்.

Previous Post Next Post