முல்லா கதை ஆரம்பம்

முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப்" தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

'சூப்' தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. "சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்." சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. 

முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் "ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள்.

"இந்த வினோதத்தைப் பார்?இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.

Previous Post Next Post