முல்லா கதை:
சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன.
![எல்லோரும் சோம்பேறிகள்! - Mulla story Episode 28 in Tamil Historical சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFXxAMH6egpP_UCyZq7hwVjF_22PPmv6fZXfTDkmxK9fRVm0UwN9qddUNf0LSS3xT9yCiUpnb5plJ05kZJi8cs9scPAPyGQRUD-VQGTjpT4teWSWDhE9-xLcppXjodQPxN_ZPJeNYPla0sqVCJHUB-Xhfg9uYZcZ00DNMWzmyWPzZ7Hkjr-tjqPIjM/w640-h290-rw/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!%20-%20Mulla%20story%20Episode%2028%20in%20Tamil%20Historical.png)
இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள்" என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.
"நண்பர்களே! கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள்" என்றார் முல்லா.
அநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள். 'முல்லா உழைக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி? தயவு செய்து கூறுங்கள்?" என்று மக்கள் கூச்சலிட்டனர். முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். "என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர்.
'நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன்" என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.